கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
பொது நிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்துக்கு சுயாதீனமான, பாரபட்சமற்ற பொருளாதார மற்றும் நிதிப் பகுப்பாய்வு, வருமானம் மற்றும் செலவினங்கள் பற்றிய பார்வையுடன் பொது நிதிப் பொறுப்புகளை நிறைவேற்ற உதவும் நோக்கத்துடனும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கு உதவுவதை நோக்காகக் கொண்டும் இது நிறுவப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திலும் சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.
இதற்கமைய இந்த இரண்டு சட்டமூலங்களும் 2023ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டம், 2023ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றன.
சான்றுரைப்படுத்தும் நிகழ்வில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர மற்றும் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் மற்றும் பதில் தொடர்பாடல் பணிப்பாளருமான ஜனகாந்த சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.