அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களை வீதிகளுக்கு இறக்கி போராட்டங்களை நடத்துவதைவிட, அவர்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு அரசியல் பிரமுகர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அமைச்சர் கூறினார்.
அஸ்வெசும திட்டத்தில் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது எனக் கூறி தலவாக்கலையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது என எண்ணத்தோன்றுகிறது. போலியான முறையில் தகவல்களும் பரப்பட்டு வருகின்றன. இதனை எம்மால் ஏற்க முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சமூகநலத்திட்டத்தையும் அரசியல் மயமாக்கி, மக்களை தூண்டிவிட்டு அரசியல் நடத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். இது ஏற்புடைய விடயம் அல்ல. தவறுகள் இடம்பெற்றிருந்தால் மக்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.