இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 09 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென “எல்ல ஒடிஸி”விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது.
அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம் ஜூலை 01 முதல் 03 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
காலனித்துவ காலத்தை நினைவுகூரும் விசேட ரயிலான வைஸ்ரொயிஸ் விசேட ரயிலில் ( Viceroy Special ) தூதுக்குழுவினர் பயணம் செய்தனர்.
நுவரெலியா ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் தூதூவர்களுக்குக் கிடைத்தது.
இந்த விசேட சுற்றுப் பயணத்திற்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.
அத்துடன், நாடு மீண்டும் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதையும், இந்த நாட்டில் சிறந்த உறவுகளையும், இலங்கையர்களின் வெளிப்படைத் தன்மையையும் நட்புறவையும் உலகிற்கு வலியுறுத்த இதன் ஊடாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.