வயிற்று வலிக்காக பேராதெனிய வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயதான யுவதி இரண்டு ஊசிகளை ஏற்றிய பின்னரே உயிரிழந்ததாக யுவதியின் தாய் குற்றம் சாட்டியிருந்தார்.
இரண்டு ஊசிகளை போட்ட பின்னர் தன்னுடைய மகள் நீல நிறமாக மாறியதாக தாய் கூறுகின்றார்.
முதல் ஊசியை ஏற்றிய பின்னர் தன்னுடைய கையிலே ஒரு வலி ஏற்பட்டதாக குறித்த யுவதி தாதியர்களுக்கு அறிவித்த நிலையில் இரண்டாவது ஊசியை தாதியர்கள் ஏற்றியுள்ளனர்.
இரண்டாவது ஊசியை ஏற்றியவுடன் தன்னுடைய மகளுக்கு கண்களில் வலி ஏற்பட்டது என்றும் ஏற்றியிருந்த சேலைன் போத்தலுடன் மகள் கழிவறைக்கு ஓடியதாகவும் உதவிகளுக்காக கூடவே இருந்த தாய் தெரிவித்துள்ளார்.
கழிவறை பகுதியில் உள்ள முகம் கழுவும் குழாயில் முகத்தை கழுவ முயன்ற போது மகளின் மூக்கில் இருந்து “சளி” வெளியாகியது எனவும் தாய் கூறியுள்ளார்.
தாய் அலறிய காரணத்தால் வைத்தியசாலை பணிக்குழாம் உடனடியாக வந்து யுவதியை ஒரு கட்டிலுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அழிக்க முயற்சித்தாலும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
சமோதி சந்தீபனி என்ற 21 வயதான குறித்த யுவதி கடந்த 10 ஆம் திகதி பிரதேச வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு கடந்த 11 ஆம் திகதி மாற்றப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த ஏற்றப்பட்ட ஊசியின் காரணத்தாலேயே தன் மகள் உயிரிழந்தததாக தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் 21 வயதான குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து தொடர்பில் விளக்கமளிக்க அகில இலங்கை தாதியர்கள் சங்கம் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது .
அதில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தாதியர்கள் சங்க செயலாளர் எஸ்.பீ. மதிவத்த கூறுகையில்..
“இதில் 10 மில்லி லீட்டர் மருந்தை கரைத்துத்தான் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் 10 மில்லி லீட்டர் கொடுக்க சிறிஞ்சர் இல்லை. ஆனால் தாதியோ 5 சி.சி இரண்டு சிறிஞ்சர்களில்தான் குறித்த மருந்தை கொடுத்துள்ளார். அதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகத்தான் இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.