எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்த நிர்மாணிப்புக்கள் அவசியம்

260

இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டுச் சென்ற பிரசித்தமான நிர்மாணங்களான ருவன்வெலிசாய, அபயகிரிய, ஜேதவனாராமய உள்ளிட்ட நிர்மாணங்கள் ஊடாக இந்நாட்டு கலைஞர்கள் உருவாக்கிய தரத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல், எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்தான கட்டிட நிர்மாணங்கள் இலங்கைக்கு அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பு சினமன் கிரேண்ட ஹோட்டலில் இன்று (05) நடைபெற்ற கட்டிடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீகிரியா இந்நாட்டின் பிரமிக்கத்தக்க அதேபோல் வாஸ்து சாஸ்திரத்திற்கு அமைவான நிர்மாணமாகும். பொலன்னறுவையில் காணப்படும் பிரமிக்கத்தக்க நிர்மாணங்களும் 2000 வருட வரலாற்று பாரம்பரியத்தை கொண்டவையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார்.

அதேபோல், 19 ஆம் நூற்றாண்டின், கண்டி திரித்துவக் கல்லூரி ஷெபல் அரங்கம், களனி விகாரை, லேக் ஹவுஸ் கட்டிடம், பேராதனைப் பல்கலைக்கழகம், சுதந்திர சதுக்கம், ஜெப்ரி பாவா நிர்மாணித்த இலங்கைப் பாராளுமன்றம் ஆகியனவும் இலங்கையின் பிரம்மிக்கதக்க படைப்புக்களின் சிலவாக விளங்குகின்றன.

கடந்த இரு வருடங்களில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் கட்டிட நிர்மாணத்துறையும் பாதிப்புக்களை எதிர்கொண்டது. நிர்மாணத்துறையில் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழந்தனர்.

சரியான நகர திட்டமிடல்கள் ஊடாக அனைத்து நகரங்கயைும் அழகிய நகரங்களாக மாற்றியமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதற்கான புதிய சட்டமொன்றும் உருவாக்கப்படவுள்ளது. அந்த நகர திட்டமிலுக்கு குறைந்தபட்சம் 10,000 பொறியியலாளர்கள் அவசியப்படுவர். அதேபோல் கட்டிடக் கலைஞர்களும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களும் அவசியப்படுவர்.

கண்டி நகரத்தில் சிறந்த நகர திட்டமிடல் ஒன்றை மீண்டும் முன்னெடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அந்த நகர திட்டமிடலை பேராதனை வரையில் விரிவுபடுத்த வேண்டும். அதேபோல் இன்னும் பல நகரங்கயைும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. அந்த அனைத்து சவால்களையும் ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராகுங்கள்.

மேலும், காலநிலை அனர்த்தங்களை வெற்றிக்கொள்ளும் இலக்குகளுக்கு முகம்கொடுக்க இலங்கை தயாராக உள்ளது. 2016 ஆம் ஆண்டில் அந்த பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அதற்கான அர்பணிப்புக்களை செய்தோம். காலநிலை அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பிலான நிகழ்ச்சி நிரலை துரிதப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உறுப்பு நாடுகளிடத்தில் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல் கட்டிடக் கலைஞர்களும் காலநிலை அனர்த்தம் தொடர்பிலான நியதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்த நிர்மாணிப்புக்களை வடிவமைக்க வேண்டும். அது தொடர்பில் உரிய தரத்தை உருவாக்கும் பொறுப்பும் உங்களை சார்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here