திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு உள்ளாகியுள்ள வகையில் பணம் செலுத்தி தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கை அல்ல என்றும் நீதிமன்ற , சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
அத்துடன், சிறைச்சாலைகளில் தனியார் தொழிற்சாலைகளை நிறுவி அதில் சிறைக் கைதிகளை தொழில்முயற்சியில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்கு 04 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் என தற்போது 28,468 சிறைக்கைதிகள் இருப்பதாகவும், சிறைக்கைதிகளில் 50.3% சதவீதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள் இருப்பதே சிறைச்சாலைகளில் தற்போது பாரிய சிக்கலாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், சில சிறைச்சாலைகளில் அதன் சதவீதம் 65% ஆக இருப்பதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தண்டனை பெறும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தண்டைனைகளை வழங்குவது மாத்திரம் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இவர்களுக்கு திறன்விருத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் புனர்வாழ்வளிப்பது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களை சிறையில் அடைத்து வருவதாக சிலர் கூறினாலும் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிறைக்கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்று ஒரு சிலர் குற்றஞ்சாட்டினாலும் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியிலும் சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்க மாத்திரம் அரசாங்கம் 3.9 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டு வருவதாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், 2021-2022 காலப் பகுதியிலும் கூட இதற்கான நிதியை ஒதுக்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், சிறைச்சாலைகளில் 13,000 சிறைக்கைதிகளுக்கே இடவசதி இருக்கின்ற போதிலும், தற்போது சுமார் 29,000 கைதிகள் இருப்பது பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதாகவும், அதற்காக திறைசேரியில் இருந்து பாரியளவு நிதி சிறைச்சாலைகளுக்கு வழங்கப்படுவதனால் பொதுமக்களுக்கு அவசியமான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை தோன்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
.சிறைக்கைதிகள் தொழில்முயற்சிகளில் ஈடுபட்டு பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை, அவர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவும், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிகரித்து வரும் போதைப்பொருளுக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெறுபவர்களை தனியாக வைத்து மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் புனர்வாழ்வளிப்பதற்குமான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.