நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எடுத்துரைத்தார்.
இதற்கு முன்னதாகவும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளைச் சந்தித்து தாம் எதிர்தோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தலையிட்டு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார். அதன் மற்றுமொரு கட்டமாக, உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள்,தொழில்முனைவோர் இவ்வாறு ஒன்றுகூடினர்.
கடந்த கொரோனா காலத்தில் தம்மால் தங்கள் தொழிலை சரியாக மேற்கொள்ள முடியவில்லை என்றும், கடந்த அரசாங்கத்தின் திறமையற்ற ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக நாடு வங்குரோத்தடைந்தமையால் தங்களின் தொழில்கள் நஷ்டத்தை எதிர்நோக்கின என்றும், இதன் காரணமாக கடனை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கடனை செலுத்துவதற்கு சாதகமான வேலைத்திட்டம் ஒன்றை வழங்குமாறும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் பரேட் சட்டத்தை அமுல்படுத்துவதால் தாம் உட்பட நாடளாவிய ரீதியில் பரந்து கிடக்கும் நுண்,சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் அநாதரவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.