தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு தேவையான மூன்று வகையான உரங்களையும் உரிய நேரத்தில் வழங்கியதாலும் நிதி உதவி அளித்ததன் காரணத்தினாலும் கடந்த பெரும் போகம் வெற்றியடைந்ததாகவும், வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் அதிக அறுவடை கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் வறட்சியால் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் நாசமாகியுள்ளது. ஆனால் வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் விளைச்சல் மிகவும் அதிகமான உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து அரிசி கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
தற்போது நெல் மற்றும் அரிசி விலைகள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய அமைச்சர் என்ற ரீதியில் நெல் விலை உயர்வை நல்லதொரு நிலையாக கருதுகின்றேன். எனினும் நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது.