20 இலட்சம் “அஸ்வெசும” பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள், கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இரண்டாவது குழுவினருக்கான கொடுப்பனவுகள் அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
தற்போது தகுதி பெற்றுள்ள 15 இலட்சம் “அஸ்வெசும” பயனாளி குடும்பங்களில் சுமார் 15 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், தகுதிபெற்ற அனைவருக்கும் விரைவாக இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“அஸ்வெசும” தொடர்பான அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம் வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
போலியான தகவல்களை சமர்ப்பித்து “அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு “அஸ்வெசும” நலன்புரி சட்டத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றிருந்தால், வழங்கப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளவும் தயங்க மாட்டோம் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
தற்போது ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு மிக விரைவில் வழங்கப்படவுள்ளதோடு, எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் குறித்த ஒரு நாளில் இந்தக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.