13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
13வது அரசியலமைப்பு திருத்தத்தின் காரணமாகவே மாகாண முதலமைச்சராக செயற்பட்டதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 13வது அரசியலமைப்புத் திருத்தம் தற்போதும் நடைமுறையில் உள்ளது என்றார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கான நிரந்தர வீட்டு உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நாம் ஒரு நாட்டின் அடிப்படையில் உயர வேண்டுமானால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதைச் செய்ய முயலும்போது, தீவிரவாதிகள் எங்களின் கால்களை இழுத்துச் செல்கின்றனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் தீவிரவாதிகள் தமது அரசியல் பிழைப்புக்காக நாட்டை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கு செயற்படுகின்றனர்.