வறுமையால் பாதிக்கப்பட்டு, வலுவூட்டப்பட வேண்டிய ஏனைய குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுப்பு விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு நிதி அமைச்சு, நலன்புரி நன்மைகள் சபை, குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்குமாறு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 19ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் நோக்கம் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான அதன் இலக்குகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு கூடியிருந்தது.
தற்பொழுது நாட்டில் 16 இலட்சத்துக்கும் அதிகமான சமுர்த்தி பயனாளிகள் குடும்பம் இருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு அமைய 2024-2026 காலத்துக்குள் 41 இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்துவதற்குத் திணைக்களம் திட்டம் வகுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.