இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் பன்முக ஆளுமை அஷ்ரப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த “வெய்யில் மனிதர்கள்” எனும் நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் அல் அஸ_மத் தலைமையில் இடம்பெற்ற இவ்வறிமுக விழாவில் பிரதம அதிதியாக பலஸ்தீனத் தூதரகத்தின் முதலாவது செயலாளர் ஹிஷாம் அபூ தாஹா கலந்து கொண்டிருந்தார்.
முதன்மை விருந்தினராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ.பி.எம். அஷ்ரப் கலந்து கொண்டார்.
நூல் தொடர்பான திறனாய்வை சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா, எழுத்தாளர் ஷாகிறா இஸ்ஸதீன், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் நிகழ்த்தினர்.
அத்துடன் கிட்டார் விற்பன்னரான முகம்மத் இக்பால் பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்.
நூலின் முதற் பிரதியை பத்திரிகையாளரும் எழுத்தாளரும் தொழிலதிபருமான பஷீர் அலி பெற்றுக் கொண்டார். விசேட பிரதியை இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் தலைவர் இம்ரான் நெய்னார் பெற்றுக் கொண்டார்.
பிரபல பலஸ்தீன எழுத்தாளர் கஸ்ஸான் கனஃபானி எழுதிய ‘அர்ரிஜாலு ஃபிஷ்ஷம்ஸ்’ எனும் அரபு மொழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டு இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச சாஹித்திய விருதையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.