சகல விளையாட்டுகளில் இருந்தும் அரசியலை அகற்ற வேண்டும்

341

நாட்டின் 220 இலட்சம் மக்களுடன் இணைந்த கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய ஊழல், திறமையற்ற மற்றும் ஒழுங்கற்ற நிர்வாகம் முடிவுக்கு வந்து சாதகமான மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டிற்கும் விளையாட்டுக்கும் அதிக நன்மை பயக்கும் வகையில் மாற்றத்தை உகந்ததாகவும் அறிவார்ந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கிரிக்கெட்டின் அடிமட்டமான பாடசாலைகள், சங்கங்கள், மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களின் வசதி வாய்ப்புகளுக்காக கிரிக்கெட்டிற்குச் சொந்தமான பெரும் தொகையான நிதி முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும், இதற்காக, முதல் வரிசை அணி போலவே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது வரிசை அணிகள் நிறுவப்பட்டு, கிராமத்திலும் நகரத்திலும் திறமையான வீரர்கள் கூட எந்தவித பாகுபாடும் இன்றி உயர் நிலைக்குச் செல்லும் வகையில் கிரிகெட் தெரிவு முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

குரோனிச கட்டமைப்பில் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் விளையாட்டு வீரர்கள் உயர் நிலைக்கு சென்ற காலங்கள் இல்லாதொழிக்கப்பட்டு, ஊழல் நடைமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், உத்தியோகபூர்வ பதவி நிலை தெரிவுகளுக்கான வாக்கெடுப்புகள் பன்முகத்தன்மையுடன் வெளிப்படத்தன்மையுடனும், பொறுப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்றும், ஊழல் நிர்வாகத்திற்கு மாற்றாக பல்வேறு தரப்புகளின் கைக்கூலிகளாக இருப்பவர்கள் அன்றி விளையாட்டுத்துறையில் புரிதல் உள்ளவர்கள் பதவிகளுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய இலங்கை கிரிக்கெட்டின் தலைவிதி தொடர்பில் இன்று (6) விசேட கூற்றொன்றை விடுத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊழல் நிறைந்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சரியான பாதையில் செல்ல, பல்வேறு குழுக்களில் நியமிக்கப்படும் நபர்களின் தகுதி மற்றும் விளையாட்டுத் துறை சார் அறிவு குறித்து கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு பழைய வீரர்கள், நேர்மையானவர்கள் மற்றும் திறமையான நிர்வாகிகளின் ஒன்றிப்பிலான புதிய வேலைத்திட்டம் தேவை என்றும், மாற்றம் சரியானதாக இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் மாற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியாது என தெரிவிக்கப்படுவதாகவும், இதன் மூலம் இரு தரப்பினரிடையேயான இழுபறி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும், இது அரசியல் இழுபறி இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சகல அனைத்து விளையாட்டுகளில் இருந்தும் அரசியலை அகற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட் விளையாட்டை வைத்து நடக்கும் அரசியல் சூதாட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், இரகசிய கூட்டு சதிகள் நிறுத்தப்பட்டு, சகல அரசியல் தரப்புகளும் ஒன்று சேர்ந்து இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் சரியான பாதைக்கு இட்டுச் செல்ல ஒன்றிணையுமாறும்,​​ தற்சமயத்திலும் அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here