பம்பலப்பிட்டி Unity Plaza வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு திட்டத்தின் கீழ் இங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புனரமைக்கப்பட்ட யூனிட்டி பிளாசா வணிக வளாகத்தின் திறப்பு விழா நேற்று (07) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.
1982 ஜூன் 25 இல், ஒனாலி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் Unity Plaza நிறுவப்பட்டது. தற்போது, 51% பங்குகள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில் 45% பங்குகள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது. இந்த வணிக வளாகத்தின் திருத்த வேலைப் பணிகள் 2021 இல் தொடங்கப்பட்டது. அதற்காக சுமார் 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இன்று, குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ள இந்த வணிக வளாகம், 5 மாடிகளில் கடைகள் மற்றும் 5 மாடிகளில் அலுவலக வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய மீள் புனரமைப்பு நடவடிக்கைகளுடன், பல வாடிக்கையாளர் நட்பு வசதிகளும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன.