கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மேலும் சில சட்ட ஒழுங்குவிதிகள்

215

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கக் கூடிய வகையிலான மேலும் சில சட்ட ஒழுங்குவிதிகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படவிருப்பதாக முதலீட்டு மேம்பாடு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரியவந்தது.

முதலீட்டு மேம்பாடு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் கௌரவ திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதில், கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சட்ட திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து குழு அதிகாரிகளிடம் வினவியவது. இதற்குப் பதிலளித்த, கொழும்பு துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரெவான் விக்ரமசூரிய குறிப்பிடுகையில், கொழும்புத் துறைமுகத்தில் வணிக முதலீடுகளைக் கொண்டுவருவதற்குத் தேவையான சட்ட ஒழுங்கு விதிகள் சில எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்றும், இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

துறைமுக நகரில் வணிகச் செயற்பாடுகளுக்காக விசேட சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் நாட்டில் காணப்படும் ஏனைய சட்டங்கள் இங்கு ஏற்புடையதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்குக் கொண்டுவரப்படும் முதலீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களில் அனுமதிகளைப் பெறுவதில் காணப்படும் காலதாமதம் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், இதனை நிவர்த்திசெய்வதற்கு மாற்று வழிகளுக்கு சாதகமான சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here