உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

199

இந்து சமுத்திரம் எந்தவொரு உலக பலவான்களின் தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட சாத்தியமான கொள்கை அடிப்படையில் விரிவான மூலோபாயத் திட்டமொன்று அவசியனெ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அதனால், உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இரத்மலான ஈகல் லேக் சைட் வளாகத்தில் நேற்று (21) நடைபெற்ற இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் இரண்டாவது பாடநெறிக்கான பட்டமளிப்பு நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

பாதுகாப்பு துறைக்குள் பரந்து காணப்படும் விடயப்பரப்புக்களை அறிந்துகொண்டு பொது மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அவசியமான குறுகிய கால பாடநெறிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து தேசிய பாதுகாப்புக்கான மூலோபாய திட்டமிடல் ஒன்றை தயாரிக்க வேணடுமெனவும் வலியுறுத்தினார்.

உலகளாவிய அரசியல் மாற்றங்களின் போது, ​​​​ஒருதலைபட்சமான உலகம் மிகவும் சிக்கலானதும் ஒருங்கிணைந்ததுமாக மாறும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளும் அண்மைக்கால மாற்றங்களும் அந்த நிலைமையை மேலும் கடினமானதாக மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.

G7 மற்றும் நான்கு தரப்பு பாதுகாப்பு உரையாடல் (Quad) போன்ற கூட்டணிகளை உருவாதல், உலக ஒழுங்கில் சீனாவின் பாதை என்பவற்றை கருத்திற் கொண்டு மாறிவரும் நிலத் தோற்றத்தில் இலங்கை மூலோபாய ரீதியில் திறமையாக கையாள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உக்ரேன் யுத்தம், சீனாவின் கடற்படைப் பலம் மற்றும் இஸ்ரேலின் மோதல்கள் போன்றவற்றின் பின்னணியில் இலங்கையின் பொருளாதார தன்னிறைவைப் பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,ஜெனிவா போன்ற சம்பிரதாயபூர்வமாக கவனம் செலுத்தப்படும் துறைகளுக்கு அப்பால் செல்லக்கூடிய வெளிநாட்டுக் கொள்கையின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய தெற்கில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் ஒத்துழைப்பது இந்தச் சூழலில் முக்கியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் பசுமை ஹைட்ரஜன் துறையில் 10 பில்லியன் டொலர் முதலீட்டை ஈர்ப்பது என்ற இலக்கு குறித்த கலந்துரையாடலில் தான் கலந்துகொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு வலுவான பொருளாதாரம் தேவை என்றும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தகம் போன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு G77 கட்டமைப்பிற்குள் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் மாநாடு மற்றும் G77 உச்சிமாநாடு என்பவற்றில் அந்த இலக்குகளை மீள மறுவரையறை செய்வதற்கும் உலகளாவிய சமாதானத்திற்கு ஒத்துழைப்பதற்கும் உலகளாவிய தெற்கிற்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தயாரிக்கப்படும் இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு மீளாய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதுகாப்பு, பொருளாதாரம், போன்ற இதுவரை கவனத்தில் கொள்ளப்படாத துறைகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகும் உலகளாவிய நிலத்தோற்றத்தில் இலங்கை தனது பாதையை அடையாளப்படுத்துவதால், பரந்த பின்னடைவு மற்றும் முன்னோக்கு பார்வையுடன் தேசிய மூலோபாயத்தை தயாரிப்பது முக்கியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here