மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதவியளிப்பதாக கல்வி அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நேற்று (24) இடம்பெற்ற இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இணைந்துக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர், அரசியல் முறைமை தொடர்பில் படிப்படியாக அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது நாட்டின் வலுவான அரசியல் எதிர்காலத்துக்கு உதவுவதாகத் தெரிவித்தார்.
தற்பொழுது நாடு பூராகவும் சுமார் 3000 மாணவர் பாராளுமன்றங்கள் செயற்படுவதாகவும் அதன்மூலம் சிறுபராயம் முதல் பொறுப்புடன் கூடிய ஒழுக்கமான, நேர்மையான தலைமைத்துவத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கு மாணவர்களை பயிற்சியளிப்பதே தமது அமைச்சின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.