பத்து வருடங்கள் காலதாமதம் அடைந்துள்ள 1996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க ஆயுதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெடிபொருட்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில், பாதுகாப்பு அமைச்சின் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அமைச்சின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
முப்படையினருக்கான உணவுப் பொருட்கள் கொள்முதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. முப்படையினருக்கான உணவுக் கொள்முதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் இணைத்து தகவல் முகாமைத்துவ அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் முன்னர் வழங்கப்பட்டிருந்தபோதும், கடற்படை மற்றும் விமானப்படையில் மாத்திரமே அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு தெரியவந்தது.
அதன்படி, இராணுவத்திற்கான கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகளைத் துரிதப்படுத்தி அதன் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், செலவினங்களுக்கு ஏற்ப படையினர் உள்ளிட்ட தரப்பினர் பலன் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.