மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 2,482 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் பிரதான வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அந்த ஏற்பாடுகளை பயன்படுத்தி மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த 6 பிரதான திட்டங்களின் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி இவ்வருடம் பெரிய கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 292 மில்லியன் ரூபாவாகும். இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் மற்றும் உள்ளூர் நிதியுடன் கொழும்பில் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வருட வரவு செலவு திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி திட்டத்திற்காக 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கொழும்பை சுற்றி தற்போதுள்ள கால்வாய்கள், ஏரிகள் மற்றும் நடைபாதைகளை பராமரித்தல் மற்றும் புனரமைத்தல், ஈர நிலங்கள் மற்றும் தாழ் நிலங்களை அபிவிருத்தி செய்தல் இதன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. களு ஓயா மழைநீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டமும் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இது தவிர கொலன்னாவ மழை நீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டு திட்டத்திற்கு 300 மில்லியன் ரூபாவும் ஒலியமுல்ல மழை நீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டு திட்டத்திற்கு 450 மில்லியன் ரூபாவும் இவ்வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.