முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதை அடுத்து, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்த நடவடிக்கைக்கு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
“.. தயா ரத்நாயக்க எனும் நபரை நமது கட்சியில் இணைத்துக் கொண்டமையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இராணுவம் என்று தயா ரத்நாயக்க வந்தால், கோட்டாபயவிற்கும் வர முடியும்..” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டதில் ரத்நாயக்கவின் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டை சரத் பொன்சேகா வெளிப்படுத்தினார்.
தனது கவலைகளை வெளிப்படுத்திய பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்திக்கு ரத்நாயக்கவின் ஆதரவு, குறிப்பாக அவரது கடந்தகால தொடர்புகளின் அடிப்படையில், கட்சியின் திசை மற்றும் கொள்கைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், “தமது கட்சியில் எவரும் வந்து கட்சி உறுப்புரிமையை கோர முடியும். நாட்டில் இப்போது இதுதான் மாற்றுவழி என அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அரசினை தோற்கடித்தால், நாம் தாம் நாட்டினை கொண்டு செல்லவுள்ளோம்.. அதற்கு கட்சி பலமாக இருக்க வேண்டும்..” என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பாத்திரம் வகித்த ஓய்வுபெற்ற ஜெனரல் ரத்நாயக்க, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி உடன் தன்னை இணைத்துக் கொண்டார்.