அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
அஸ்வெசும முதற்கட்டத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத குடும்பங்களுக்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத எந்தவொரு நபர்களும் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அடையாள அட்டைகள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம், ஆட்பதிவுத் திணைக்களத்தினால் பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அஸ்வெசுமவின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பத்தை ஒன்லைன் முறையிலும் கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்தின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் www.wbb.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய முடியும்.
இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கான மாதிரி விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் அல்லது சிவில் அமைப்புகளின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப்படிவங்களை எக்காரணம் கொண்டும் பணம் செலுத்தி வாங்க வேண்டிய அவசியம் கிடையாது.
முதற்கட்டமாக விண்ணப்பித்து அஸ்வெசும நன்மைகளைப் பெறத் தகுதி பெறாதவர்களும், மேல்முறையீட்டு விசாரணையில் பங்கேற்காதவர்களும் தங்களின் தகவல்களை மீள் சான்றுபடுத்த வாய்ப்பு வழங்கப்படும் அஸ்வெசும தொடர்பான மேலதிக தகவல்களை, 1924 எனும் அவசர எண்ணின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.