காஸாவில் தொடர்ந்து எஞ்சியுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்காத பட்சத்தில் எதிர்வரும் ரமழான் மாத ஆரம்பத்தில் தெற்கு காஸாவில் 1.5 மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகர் மீது படை நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இந்நகரில் இருக்கும் பலஸ்தீனர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழலிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் சூழலில் அமெரிக்கா மற்றும் ஏனைய சர்வதேச அரசுகள் அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை, ரபா மீதான தாக்குதல் திட்டத்தை கைவிடும்படி இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
எனினும் எகிப்து எல்லையை ஒட்டிய இந்த நகர் ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என்று இஸ்ரேல் அரசு கூறுகிறது.
இங்கு காஸா மக்கள் தொகையில், பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதோடு இவர்கள் மோதுமான உணவு, நீர் மற்றும் மருந்து வசதிகள் இன்றி சிறு கூடாரங்களில் தங்கி உள்ளனர்.
“.. ரமழானுக்குள் எமது பணயக்கைதிகள் வீடு திரும்பாவிட்டால் ரபா பகுதி உட்பட போர் அனைத்து இடங்களிலும் தொடரும் என்பதை உலகமும் ஹமாஸ் தலைவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹமாஸுக்கு ஒரு தேர்வு தான் உள்ளது. அவர்கள் சரணடைந்து, பணயக்கைதிகளை விடுவிக்கும் பட்சத்தில் காஸாவில் உள்ள பொதுமக்கள் ரமழான் நோன்பை அனுஷ்டிக்க முடியும். பொதுமக்களின் உயிரிழப்புகளை முடியுமான வரை மட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா மற்றும் எகிப்து கூட்டாளிகளுடன் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதல் நடத்தப்படும்..” என்று ஜெரூசலத்தில் அமெரிக்க யூதத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய ஓய்வுபெற்ற இஸ்ரேலிய இராணுவத் தளபதியும் போர் அமைச்சரவை உறுப்பினருமான பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரினால் அந்த குறுகிய நிலத்தின் பெரும் பகுதி தரைமட்டமாக்கப்பட்டு பெரும் அழிவை சந்தித்திருக்கும் நிலையில் அங்குள்ள பலஸ்தீனர்கள் எங்கு செல்வது என்ற கேள்விக்கு இன்னும் உறுதியான பதில் இல்லாமல் உள்ளது.
“இங்கே பாதுகாப்பான இடமில்லை. மருத்துவமனைகள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று இறந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ரபா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு வந்த அஹமது முஹமது அப்துர்ரிஸ்க் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
இதில் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருந்த உடல் ஒன்றை காண்பித்து, “இது எனது மைத்துனர். பாதுகாப்பு பகுதியான அல் மவாசியில் வைத்து அவர் உயிர்த்தியாகம் செய்தார். அதற்கு முந்தைய தினத்தில் எனது தாயும் உயிர்த்தியாகம் செய்தார்” என்று அப்துர்ரிஸ்க் கூறினார்.
ரபா பகுதியினை குறியாகக் கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸின் நிபந்தனைகள் மாயை என்றும் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டாலும் கூட, ரபாவை சுத்தப்படுத்தாத வரை காஸாவில் இருந்து ஹமாஸை ஒழிக்கும் நடவடிக்கை பூர்த்தியாகாது என்று குறிப்பிட்டுள்ளார். “உடன்பாடு எட்டப்பட்டாலும் எட்டப்படாவிட்டாலும் நாம் முழு வெற்றியை பெற்று வேலையை பூர்த்தி செய்வோம்” என்று ஜெரூசலத்தில் செய்தியாளர் சந்திப்பில் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.