மொட்டுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை முன்வைத்தால், அவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட திறமையானவராக இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இது சரியான தருணம் அல்ல எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
உடுகம்பொல பிரதேசத்தில் முன்னாள் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேறு யாரும் இல்லை என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பேன். ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார். அது எனக்கு நன்றாகவே தெரியும். நாமல் தம்பிக்கு இது நேரமில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அவருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. நான் இதை நாமலின் முகத்திற்கு நேரிலேயே சொல்லியிருக்கிறேன். எனவே அவர் சரியான நேரத்தில் முன்வர வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட பலவீனமான வேட்பாளரை எங்கள் கட்சி நிறுத்தினால், நான் இந்தக் கட்சியில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதை நான் அப்போது முடிவு செய்வேன். ஆனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டால் அது மொட்டுக் கட்சியில் இருந்து தான் போட்டியிடுவேன். நான் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் வெற்றி பெறுவேன். ஆனால் நான் மொட்டுக் கட்சியில் மட்டும்தான் தேர்தல் கேட்பேன்.
மக்கள் விடுதலை முன்னணிக்கு பேஸ்புக் அலை உள்ளது. இந்த நாட்டின் வர்த்தகர்களும் புத்திசாலி மக்களும் ஜே.வி.பிக்கு வாக்களிக்கவில்லை. தவறுதலாக சரி அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால், அந்த அதிகாரத்தை காப்பாற்ற, அடக்குமுறையை அதிகபட்சமாக பயன்படுத்துவார்கள். ஆட்சியைப் பிடிக்கவும், ஆட்சியைத் தக்கவைக்கவும் மக்கள் விடுதலௌ முன்னணி எந்த முயற்சிக்கும் தயாராக உள்ளது. இதை பற்றி லால் காந்தா பகிரங்கமாக கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.