14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றம்

254

நாட்டில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும், 62 சட்டங்களை, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை இம்முறை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால் அடுத்த பாராளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற சட்ட சீர்திருத்தம் தொடர்பாக ‘வட்ஸ் நிவ்’ இளம் சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் விரைவான பொருளாதார மாற்றத்திற்காக பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றியமைத்து, அனைத்து அரச கூட்டுத்தாபனங்களையும் நிறுவனங்களாக மாற்றி, அந்த அனைத்து நிறுவனங்களையும் பிரதான கம்பனிகளுக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தேசிய உற்பத்தி ஆணைக்குழு நிறுவப்படும். அத்தோடு சுற்றுலா தொடர்பான புதிய சட்டம், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், புதிய சுற்றுச்சூழல் சட்டம், சிங்கராஜா, சிவனொளிபாத மலை, ஹோட்டன் சமவெளி, வஸ்கமுவ வனப் பூங்கா என்பவற்றின் பாதுகாப்புக்காக புதிய சட்டங்கள் கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வர்த்தகத் திணைக்களம் நீக்கப்பட்டு, புதிய சர்வதேச வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டு, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பணிகள் செயல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கல்வித் துறையிலும் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த புதிய சட்டங்கள் கொண்டு வருவதை சிலர் தடுக்க முயன்றாலும் பாராளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் அந்த சட்டங்களை யாராலும் ரத்து செய்யவோ அல்லது மறைமுகமாக செயல்படுத்தாதிருக்கவோ முடியாது.
வியாக்கியானம் வழங்கும் போர்வையில் நாட்டின் சட்டங்களை மட்டுப்படுத்தி பாராளுமன்ற அதிகாரங்களை மட்டுப்படுத்த சிலர் முயன்றாலும் அவ்வாறு எதுவும் செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அதிகாரம் பாராளுமன்றத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இல்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் பாராளுமன்றத்தால் அதனை நீக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் பாராளுமன்றத்தினால் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை நீக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாரேனும் இந்த சட்டங்களை மட்டுப்படுத்த விரும்பினால், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, சட்ட மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு முன்பாக பரிசீலிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆனால், இந்த சட்டங்களை நிறுத்தி, மக்களை இனியும் துன்புறுத்துவதற்கு இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இவற்றை மனித உரிமை மீறல்களாக காண்பிக்க சிலர் முயல்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாவது மனித உரிமை என்பது நாட்டு மக்களின் வாழ்வுரிமை என்றும், இரண்டாவது இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here