நாட்டின் எழுந்துள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதில் நாடு பெறும் டொலர்களும் ரூபாக்களையும் கொண்டே அமைகிறது. டொலரையும், ரூபாவையும் ஈட்டுவதற்கு முறையான வேலைத்திட்டம் இல்லாமல் வெறும் பேச்சுக்களை வைத்து பதவிக்கு வர யாராவது யோசித்தால், நாட்டு மக்கள் இரண்டாவது அவலத்தை எதிர்நோக்குவர். 2019 ஆம் ஆண்டைப் போன்று 2024 ஆம் ஆண்டிலும் மக்கள் பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உண்மை,யதார்த்தம், தரவு, அறிவியல் மற்றும் பரிசோதனைகள், பகுப்பாய்வுகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்த கொள்கை உருவாக்கத்திற்கு ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டும். கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை செயல்படுத்துதல், கண்காணித்தல், பின்தொடர்தல் மற்றும் மீளாய்வு செய்தல், பின்னூட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 122 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அநுராதபுரம் கே.பீ.ரத்நாயக்க மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(13) இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயரடுக்கு பெரும் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கே டிஜிட்டல் ஸ்ரீலங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இலவசக் கல்வியை போதிக்கும் 10126 அரச பாடசாலைகளில் 41 இலட்சம் பிள்ளைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் போக்கை காண்பதிற்கில்லை. இந்த பிள்ளைகளின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்பட்டு வருகின்றன. காலாவதியான கல்வி முறைமையினால் ஒரு சில துறைகளைத் தவிர, பெரும்பாலான துறைகளைச் சேர்ந்தவர்கள் வேலையின்மை வரிசையில் நிற்கிறார்கள். தனியார் துறையில் கூட அவர்களால் வேலைவாய்பை எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இது பெரும் துரதிஷ்டம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.