ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மீண்டும் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் அவர்கள் இருவர் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, அடுத்ததாக இடம்பெறவுள்ள தேர்தல் பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
அவ்வாறு இடம்பெறுமானால் தற்போது ஆளும் கட்சி அந்தஸ்த்தில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எண்ணிக்கையினை கணிசமாக அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கட்சியின் எதிர்காலத் திட்டம் மற்றும் தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.