இலங்கையில் தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப கடந்த ஆண்டில் (2023) வறுமை 25.9 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கியின் வதிவிட பிரதம பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் நேற்று (02) தெரிவித்தார்.
2012 இல் வறுமை நிலை 13.1 சதவீதமாக இருந்தது.
தொழிலாளர் சந்தையில் நிலவும் தடைகள் காரணமாக நாட்டில் இன்னும் வறுமை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நேற்று கொழும்பில் உள்ள உலக வங்கி அலுவலகத்தில் ‘இலங்கையின் வளர்ச்சி மதிப்பீடு’ என்ற தலைப்பில் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடும் நிகழ்வில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மூடப்படுவதால், நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் தொழிலாளர் படையில் பங்கேற்பு இல்லாமை ஏற்பட்டுள்ளதாகவும் ரிச்சர்ட் வோக்கர் குறிப்பிட்டார்.
உலக வங்கியினால் நேற்று வெளியிடப்பட்ட இலங்கை அபிவிருத்தி மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‘பொருட்களின் விலை உயர்வு, வருமானம் குறைதல், குறைந்த வருமானம் கொண்ட வேலைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், மக்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியுள்ளது.’
உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் (தெற்காசியப் பிராந்தியம்) பிரான்சிஸ்கா ஒன்சோ மற்றும் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் வதிவிட முகாமையாளர் சியோ காந்தா ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.