ராஜபக்ஷர்களுக்கு இனி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
எந்தத் தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்திருந்தார்.
ரமழான் காலத்துக்காக கொழும்பில் மக்களுக்கு உலர் உணவுகளை விநியோகித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஞானசார தேரர் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மதிப்பதாகவும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் குறித்த திகதியில் நடத்தப்பட வேண்டும் எனவும், அதனை எந்த வகையிலும் மாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும், அதனை மாற்ற முயற்சித்தால் நாடு பெரும் பாதாளத்தில் விழும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.