follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்

நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்

Published on

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் உள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத்துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதுருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை இன்று (14) திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத்துறைக்குத் தேவையான புதிய திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி கூடங்கள், விரிவுரை மண்டபங்கள், கணினி ஆய்வகங்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான தொழில் ஆலோசனை மையங்கள் இங்கு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதுடன் AI மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மையமும் இங்கு நிறுவப்பட உள்ளது.

இந்த புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 750 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே இந்நாட்டின் கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

இலங்கையை அண்டியுள்ள நாடுகளின் சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது என்றும் அந்த நாடுகளில் உள்ள நடுத்தர மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயத்தை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் தொழிலை உயர்த்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இப்போது இந்த நாட்டுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் ஏனைய தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

மேலும் நாம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். கடனை அடைக்க எங்களுக்கு கால அவகாசம் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, அதிலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை. மேலும் நாம் எப்போதும் கடனில் வாழ முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைபுக்கு நேற்று (13) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போது நாம் இந்த திட்டத்தை முன்னோக்கி செயல்படுத்த வேண்டும்.

வரலாற்று ரீதியாக நமது விவசாயம், ஏற்றுமதி விவசாயமாக மாறிவிட்டது. சிங்கள மன்னராட்சியின் போது தானியங்கள் பயிரிடப்பட்டன. மேலும், ஈர மண்டலத்தில் வாசனைப் பொருட்கள் பயிரிடப்பட்டன. வெள்ளையர்களின் வருகைக்குப் பின் தேயிலை, தென்னை, இறப்பர் என்பன பயிரிடப்பட்டன.

இப்போது நாட்டில் விவசாயத்தை நவீனமயமாக்கவும், ஏற்றுமதி விவசாயத் தொழிலை மேம்படுத்தவும் தேவையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆகியவை நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பயிர்களாக மாறியுள்ளன.

வெள்ளையர்கள் விரட்டப்பட்டு தோட்டங்களை நாம் கையகப்படுத்தியதால் அவர்கள் கென்யாவில் தேயிலை உற்பத்தியை ஊக்குவித்து எமக்கு போட்டியாக செயற்படுகின்றனர். வியட்நாமும் இறப்பர் செய்கையை மேம்படுத்தி இலங்கையுடன் போட்டியிடுகிறது. எனவே, இந்தப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் தோட்டத் தொழிலை மாற்றியமைக்க வேண்டும்.

தற்போது விவசாயத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதனால் நாம் தோட்டங்களை விவசாய வர்த்தகமாக மாற்றி உற்பத்தியை பலப்படுத்த வேண்டும். தேயிலை மற்றும் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று எமது தேயிலை தொழில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் அதனை சாதகமாக செய்கின்றன.

நாட்டின் பாரம்பரிய பயிர் உற்பத்தியைப் பலப்படுத்த வேண்டும். நமது நாடு கோகோ, கருவா மற்றும் ஏனைய மசாலாப் பொருட்களையும் மீண்டும் நடுகை செய்ய வேண்டும். புதிய பயிர்களை விளைவிக்க வேண்டும். அதற்காக இத்துறைக்கு புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, உற்பத்தியை அதிகரிக்க சிறு தோட்ட உரிமையாளர்களையும் இந்த நவீனமயமாக்கல் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

விவசாயத்தை மேம்படுத்தினால் மட்டுமே கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும். எனவே தற்போதுள்ள பயிர்கள் மற்றும் காணிகளையும் சிறந்த முறையில் பயன்படுத்தி 05 இலட்சம் ஏக்கர் புதிய காணியில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்கு நவீன விவசாயமும், நவீன விவசாய வர்த்தகமும் அவசியம். இந்த நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...