பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் மேற்படி இணக்கப்பாட்டுடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சரியான திட்டத்துடன் செயற்பட்டால் மாத்திரமே சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Cephalosporin ஊசி மற்றும் மெல்டோல் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று (06) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தாார்.
எதிர்காலம் நிலையற்றததென நினைக்கும் இளையோருக்காக அடுத்த மூன்று வருடங்களில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த தொழிற்சாலைகள் வாயிலாக இளைஞர் யுவதிகளுக்கான பல தொழில் வாய்ப்புக்கள் உதயமாகியுள்ளன. இவ்வாறான நல்ல தொழில் துறைகள் நாட்டுக்கு அவசியம். தொழில் இன்மை நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. குறைந்த வருமானம் பெறுவோரும் பெருமளவில் உள்ளனர். கொவிட் பரவல் – பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் புதிய தொழில்துறைகள் உருவாகவில்லை. 04 வருட தொழில் இன்மை பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் புள்ளிவிவரத் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 15 – 25 சதவீதம் வரையில் நாட்டின் வறுமை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் இளையோருக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும். இளையோருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது முதற் கடமையாகும். அதற்காக நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம். அதனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டாது. ஒரே இடத்தில் இருந்தால் நாம் மீண்டும் வீழ்ந்துவிடுவோம். அதனால் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
நாம் முன்னோக்கிச் செல்வதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. பலரும் போலி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் எம்மீது பல பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்டு போலி வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
யத்தத்திற்குப் பிறகு வியட்நாம் அதன் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிந்தது. இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளும் இந்தப் பொருளாதாரப் பயணத்தில் செல்ல முடிந்தது. எப்பொழுதும் பிச்சைக்காரர்களின் தேசமாக நாம் வாழ முடியாது. இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். அதற்கு ஒரு நாடாக நாம் சுயமான பலத்துடன் எழுந்து நிற்க வேண்டும். ” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.