follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

Published on

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பதுளையில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை இருளில் மூழ்கடிக்கும் வரிசை யுகத்திற்கு இடமளிக்க வேண்டாம் என அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்த மக்களிடம் ஆணை கேட்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியவற்றின் தொழிற்சங்க தலைவர்கள் சிலரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”நாங்கள் வெற்றி பெறுகிறோம்! இந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்தால் எமது வெற்றி உறுதியாகிறது. இந்த வாரம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்தலை எதிர்கொள்கிறீர்கள். நாம் வளமான, நிலையான நல்ல வாழ்க்கை வாழப் போகிறோமா அல்லது வரிசை யுகத்திற்குத் திரும்பப்போகிறோமா என்பதை இது தீர்மானிக்க வேண்டும். நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு கொண்டு செல்லும் தவறை செய்ய வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக கடந்த இரண்டு வருடங்களில் நாம் முன்னெடுத்த வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய தலைவர்கள் முடியாது என்று கூறுகையில் நான் ஆட்சியை ஏற்றேன். இந்நாட்டு மக்கள் உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி தவிக்கும் போது சஜித்தோ, அநுரவோ கண்டுகொள்ளவில்லை. மருந்து இல்லாமல் மக்கள் இறந்தபோது அவர்கள் வருத்தப்படவில்லை. அவர்கள் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய மக்களை தியாகம் செய்ய விரும்பினர்.

மக்களைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் என்னுடன் இணைந்தனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம். 2025ஆம் ஆண்டில் மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்க முடியும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, ​​ பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 05 வருடங்கள் ஆகும். ஆனால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மிக விரைவாக மீட்டோம். நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு காலப்பகுதியில் அதன் வித்தியாசத்தை மக்கள் காணலாம்.

நாங்கள் இன்னும் தொங்கு பாலத்தில் இருக்கிறோம். இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தப் பயணத்தை நிரந்தரமாக்க வேண்டும். ஹுனுவடயே கதையில் வருவதைப் போலல்லாமல், குழந்தையின் உரிமையைப் பெற தப்பித்து ஓடிய இரண்டு நதாலியாக்கள் உள்ளனர். அவர்களிடம் திட்டம் இல்லை. நாட்டைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இல்லை. வரிகளைக் குறைப்பதாகச் சொன்னாலும் அதற்கான அதிகாரத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறவில்லை. அதனால்தான் மக்கள் முன்பொய் சொல்கிறார்கள்.

தப்பித்து ஓடிய தலைவர்களை நம்ப முடியாது. தப்பித்த நதாலியாக்கள் இருவரினாலும் குழந்தையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எனவே செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...