அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மொத்தமாக 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சர்வதேச முன்பதிவுகள் ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும், உள்ளூர் பயணத்திற்கான முன்பதிவுகள் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் குறைந்துள்ளது.
அதேபோல் உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணமும் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவுகள் செய்தவர்களும் ரத்து செய்து, மாற்று விமான நிறுவனத்தை நாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
ஏர் இந்தியா விமான நிறுவனம், பல வெளிநாட்டு வழித்தடங்களில் தற்காலிகமாக விமான சேவையை நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.