குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிக்க சீனாவுடனான ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் செய்து முடிக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையில்
கைச்சாத்திடப்பட்டது. சீன அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் சீன அரசாங்கத்தின் மத்திய தெற்கு கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவன கூட்டுத்தாபனத்தின் செயலாளர் ஷென் தாவோ ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்புப்
பிரச்சினைகளுக்குத் தீர்வாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் (29 பில்லியன் ரூபாய்) உதவியை வழங்கவுள்ளது. இந்த வீட்டுத் திட்டங்கள் 5 இடங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளன.
அதற்காக பேலியகொட, தெமட்டகொட, கொட்டாவ, மஹரகம, மொரட்டுவ ஆகிய நகரப் பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த 5 வீட்டுத் திட்டங்களில் கொட்டாவ வீடமைப்புத் திட்டம் நாட்டின் மூத்த
கலைஞர்களுக்காக 108 வீடுகள் கட்டப்படவுள்ளது.
மற்ற 4 திட்டங்களும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு, கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1,888 ஆகும். இவ்வருட இறுதிக்குள் இங்கு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.