follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுகண்கவர் நகரமாக நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய திட்டம்

கண்கவர் நகரமாக நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய திட்டம்

Published on

நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நுவரெலியா நகர அபிவிருத்தி தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலா திட்டம் என்பனவும் வெளியிடப்பட்டன.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பலர் நினைத்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் வாயிலாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளதென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வரும் சுற்றுலாப் பிரயாணிகளை இலக்கு வைத்து வருடம் முழுவதும் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துக் கொள்ளுவதற்கான கண்கவர் நகரமாக அதனை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் நோக்கத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறையின் தேவைப்பாடுகளை அறிந்துகொண்டு புதிய திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர் கட்டிடங்களுக்கு மாறாக ஓய்வெடுக்கக்கூடிய வகையிலான ரம்மியமான சூழலுடல் அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நுவரெலியா நகரத்திற்குள் மழைநீர் வழிந்தோடுவதற்கு அவசியமான வேலைத்திட்டம் ஒன்று இல்லாமை நீண்டகால பிரச்சினையாக உள்ளதெனவும் அதற்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்திய ஜனாதிபதி, குடிநீர் பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதற்கான முக்கியமான சில அறிவுரைகளையும் வழங்கினார்.

நுவரெலியா நகரத்திற்கு முறையற்ற விதத்தில் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு மாறாக உரிய திட்டமிடலுக்கமைய நிர்மாணிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரிய கட்டிடங்களை நிர்மாணிப்பதால் நகரம் சீரழிவுக்கு உள்ளாவதாகவும் நுவரெலியாவாகவே தொடர்ந்தும் தக்கவைப்பதா அல்லது நியுயோர்க் நகரமாக மாற்றியமைப்பதாக என்பதை தீர்மானிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மத்திய அதிவேக வீதியின் நிர்மாண பணிகள் நிறைவு கண்டவுடன் நுவரெலியாவிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு அவசியமான வசதிகளை மேம்படுத்துவதற்கான உரிய திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்கள் மற்றும் வேறு தரப்பினருக்கு அவசியமான வகையில் நுவரெலியா மாவட்டத்தை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதெனவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் திட்டமிடப்பட்ட வகையிலுமான அபிவிருத்தியை நகருக்குள் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நகரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நானுஓயாவை உப நகரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வனப் பாதுகாப்புப் பகுதிகளைப் பாதுகாத்து நுவரெலியாவை பசுமை நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் நுவரெலியாவை மையமாகக் கொண்டு 05 புறநகர்ப் பகுதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது மற்றும் இராமாயண மையம் ஒன்றை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தி அதற்கு அருகில் உயர்தர பொருளாதார நிலையமொன்றை ஸ்தாபிக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இதன் மூலம் விவசாயிகள் மரக்கறிகளை பொதி செய்து பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

குதிரைப் பந்தய மைதானம் மற்றும் குளத்தை அபிவிருத்தி செய்தல், குளத்திற்கு அருகில் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்துதல், நுவரெலியா நகரில் முறையான நீர் முகாமைத்துவ வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பிரதேச மக்களின் வருமானத்தை உயர்த்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...