ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) ஜப்பான் சென்றடையவுள்ளார்.
ஜனாதிபதி நேற்று (23) சிங்கப்பூர் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி, அந்நாட்டு சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் திரு.கே.சண்முகம் மற்றும் நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் செல்ல உள்ளார்.
ஜனாதிபதி இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஜப்பானில் தங்கியிருக்கவுள்ளார்.
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறைகள் மூலம் வலுப்படுத்துவது குறித்தும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளன.
இந்த விஜயத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவில் நடைபெறும் ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28வது சர்வதேச மாநாட்டிலும் உரையாற்ற உள்ளார்.