மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.
இலங்கையின் நீர்வளத்துறை, மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பம் பற்றி ஆராய்கையில், ஜப்பானிய தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கி JICA பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளும் சுட்டிக்காட்டப்பட்டன. மலையக மாற்றத்திற்கான புதிய திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
மலையக பெருந்தோட்ட சமூகங்களின் நிலைமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவு வழங்கப்படும் என JICA பிரதிநிதிகள் சந்திப்பில் உறுதியளித்துள்ளனர்.