நகர அபிவிருத்தி அதிகாரசபையானது கொழும்பை சுற்றியுள்ள குடிசைவாழ் மக்களுக்கான நகர மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 48,156 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி 22 வீட்டுத் திட்டங்களில் 13,602 வீடுகளை நிறைவு செய்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தலைமையில் கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் போது கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.
எனினும் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 66 வீடுகள் இன்னும் காலியாக உள்ளதாக கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
காலியாக உள்ள வீடுகளின் உரிமையாளர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்களில் ஒரு வீட்டுத் திட்டத்திற்கு மாத்திரமே கூட்டு ஆதன முகாமைத்துவ சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை 667.6 மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீடுகளின் பராமரிப்புக்காக செலுத்தியுள்ளதாக தெரியவந்தது.
இதன்படி வீடுகளின் உரிமை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அந்த வீடுகளை பராமரிக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து நீக்கப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.