பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ரூ. 5500 இற்கு விற்பனை செய்யக்கூடிய 21 வீதம் நைட்ரஜன் கலந்த உரத்தினை 46வீதம் நைட்ரஜன் உள்ளடங்கியிருப்பதாக போலி லேபல்களை ஒட்டி ஒரு கும்பல் பொலன்னறுவை பிரதேசத்தில் விற்பனை செய்து வந்துள்ளது.
அவ்வாறு மோசடியாக லேபல் மாற்றப்பட்ட ஒரு மூடை உரம் 13,650ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலன்னறுவை பொலிஸார் குறித்த மோசடி உர விற்பனை களஞ்சியத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
அதன் போது அ்ஙகிருந்து 1565 உர மூட்டைகளும், அதிக விலை பொறிக்கப்பட்டு போலி லேபல் அச்சிடப்பட்ட 13500 உர பைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் முகாமையாளர் உட்பட 12 ஊழியர்களும் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தப்பிச்சென்றுள்ளார். களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோசடி உர களஞ்சியசாலை உரிமையாளரின் மூன்று வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.