தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும் என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒருகொடவத்தையில் இருந்து பொரளை வரை செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள தெமட்டகொடை ரயில் கடவையில் மே 24 அன்று அவசர புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் காரணமாக, மே 24 ஆம் திகதி காலை 9:00 மணி முதல் மே 25 ஆம் திகதி காலை 6:00 மணி வரை பிரதான வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும்.
இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசல் மற்றும் அசௌகரியங்களை குறைக்க, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு தம்மிக்க ஜயசுந்தர தனது அறிக்கையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.