கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேல் மாகாணத்தின் 21 உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஆரம்பமாகும் 16 ஆம் திகதி மாநகர முதல்வர், மாநகர துணை முதல்வர் பதவிகளுக்காக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக மேல் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர நேற்று வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதாவாக்கை நகர சபை மற்றும் சீதாவாக்கை பிரதேச சபைகளின் கன்னி அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கொலன்னாவ, பேலியகொடை, வத்தளை, மற்றும் மாபொல நகர சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
தொடங்கொட பிரதேச சபையின் மற்றும் பேருவளை நகர சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், பேருவளை மற்றும் களுத்துறை பிரதேச சபைகளின் கன்னி அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
களுத்துறை மாநகர சபையின் மற்றும் மில்லனிய பிரதேச சபையின் கன்னி அமர்வு இந்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹொரண நகர சபை உட்பட மேல் மாகாணத்தின் மேலும் 8 பிரதேச சபைகளின் கன்னி அமர்வு ஆரம்பமாகும் திகதி தொடர்பில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.