follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP22025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

Published on

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104% ஐ ஈட்டமுடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் கூடிய (06) வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.

2025ஆம் ஆண்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் ரூபா 240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும், ரூபா 2 பில்லியனை பீடியிலிருந்தும் ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோதமான மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பலர் விலகியிருப்பது, அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என்றும், இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் (கலாநிதி) ஷர்ஷன சூரியப்பெரும தலைமையில் வழிவகைகள் பற்றிய குழு கடந்த 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்த விடயங்களைத் தெரிவித்தனர். மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் முகாமைத்துவம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இக்குழு கூடியிருந்தது.

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டுடன் கூடிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கையடக்கத்தொலைபேசிகளில் உள்ள செயலியின் மூலம் ஸ்கான் செய்து போலியான மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் கேள்வியெழுப்பினார். இச்செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டினர்.

2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய QR குறியீட்டு ஸ்டிக்கர் முறையின் பின்னர் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள QR குறியீட்டின் மூலம் மதுபானப் போத்தல்களின் உண்மைத் தன்மையைப் பரிசீலிக்கும் திட்டம் எதிர்காலத்தில் பொதுமக்களுக்களுக்கும் திறக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதியமைச்சர் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய செயற்றிட்டத்தைப் பயன்படுத்தி சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவற்றில் போலியான மதுபானப் போத்தல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வது மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மதுவரித் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மதுபானத்தின் விலை அதிகமாக இருப்பதால் சட்டவிரோதமான மதுப்பாவனை அதிகரிப்பதாகவும், இதற்குத் தீர்வாக நியாயமான விலையில் தரமான மதுபானத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வரி செலுத்தும் நடைமுறையில் சகல பிரஜைகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும், பொது மக்களின் வரிப்பணத்தை ஒரு ரூபா கூட வீண்விரயமாக்காமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம் என்றும் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...