பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சாட்சியாளர்கள் பட்டியலில் இருந்த அனைத்து சாட்சியாளர்களும் இன்று (25) சாட்சியங்களை வழங்கி முடித்தனர்.
பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அவரது சாட்சியாளர்கள் பட்டியலில் 15 சாட்சியாளர்கள் சாட்சியங்களை வழங்கவிருப்பதாக பொலிஸ்மா அதிபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ்.வீரவிக்ரம முன்னர் கூறியிருந்தபோதும், இன்றையதினம் மேலும் இருவர் சாட்சியளித்ததுடன், ஏனைய சாட்சியாளர்கள் விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியளிக்க மாட்டார்கள் என அவர் அறிவித்தார்.
இதனால், இந்த சாட்சியாளர்கள் இன்றைய தினம் விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தபோதும் அவர்களை விடைபெற்றுச் செல்லுமாறு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சாட்சியாளர் பட்டியலில் இருந்து 7 சாட்சியாளர்களே சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டு பிரதிவாதியின் வழக்கு இன்று முடிவுக்கு வந்தது.
உத்தியோகபூர்வ பணிக்காக வெளிநாடு சென்றுள்ள முறைப்பாட்டாளரின் சாட்சியாளர்கள் இருவரிடமிருந்து ஜூன் 26ஆம் திகதிக்குப் பின்னர் சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணைக் குழுவில் கலந்துகொண்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா மற்றும் பொலிஸ்மா அதிபரின் தரப்பினர் இணங்கிக் கொண்டதற்கு அமைய ஜூலை 01 திகதி மு.ப 9.30 மணிக்கு இந்த சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இதன் பின்னர், இரு தரப்பின் எழுத்துமூல சமர்ப்பிப்புக்களையும் ஜூலை மாதம் 8ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு முன்னர் குழு முன்னிலையில் சமர்ப்பிப்பதற்கும் சட்டமாஅதிபரின் பிரதிநிதிகளும், பிரதிவாதியின் தரப்பினரும் இணங்கியிருந்தனர்.