கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இன்று (25) தெரிவித்தார்.
இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
துறைமுகத்திலிருந்து சரக்குப் பொருட்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் காரணமாக மீண்டும் வரிசை ஏற்பட்டுள்ளது.
இடப்பற்றாக்குறை, விடுவிப்பு முனைய அதிகாரிகள் மற்றும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக சரக்குப் பொருட்கள் முறையாக விடுவிக்கப்படவில்லை.
கொள்கலன் பாரவூர்திகளை நிறுத்தி வைப்பதற்கு புதிய தரிப்பிடம் உருவாக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரைகளை உரிய அதிகாரிகள் பின்பற்றாமையால் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள், உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்படும் பட்சத்தில் சரக்கு கப்பல்கள் வேறு துறைமுகங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படலாம். மேலும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் இவ்வாறு துறைமுகங்களில் தேங்கிடப்பதனால் காலாவதியாக கூடும். ஆகையால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.