1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய 2437/04ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2025 ஜூன் 17 திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதி தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த ஒழுங்குவிதிக்கு இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
உள்நாட்டு சந்தையில் தற்பொழுது நிலவும் உப்பு தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு வீட்டுப் பாவனை மற்றும் தொழிற்சாலைகளின் பாவனைக்கான அயடின் சேர்க்கப்படாத ஆரம்ப நிலை உப்பு மற்றும் உணவுக்குப் பெற்றுக்கொள்ளக் கூடிய அயடின் சேர்க்கப்பட்ட உப்பை (கட்டி மற்றும் தூள்) இறக்குமதி செய்வதற்கு இந்த ஒழுங்குவிதியின் மூலம் வாய்ப்புக் கிடைக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இதில் சிலோன் மோட்டார் ட்ரேடர்ஸ் சங்கம் உள்ளிட்ட இலங்கையில் வாகன இறக்குமதியில் ஈடுபடும் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் குறித்து இங்கு குழு கவனம் செலுத்தியது. பதிவு செய்யப்படாத மற்றும் குறுகிய தூர வாகனங்களுக்கு விதிக்கப்படும் சேர் பெறுமதி வரி (VAT) வருவாயை முறையாக வசூலிப்பது மற்றும் அத்தகைய வரிகளின் மீதமுள்ள தொகை குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.