இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் இக்குழு நேற்று (15) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கருத்திற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் வலுசக்தி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த சட்டமூலத்தை திருத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் சில தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் சில விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களமும் குழு முன்னிலையில் சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன் இணக்கம் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களுடன் சட்டமூலத்தை மும்மொழியிலும் அச்சிட்டு 2025.07.17 ஆம் திகதி குழுவின் அனுமதிக்காக சமர்பிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய எதிர்வரும் 2025.07.17 ஆம் திகதி குழு கூடவுள்ளது.