2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, 2025 ஆம் ஆண்டிற்கான முழு சீருடைத் தேவையும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கும் சான்றிதழ்கள் இலங்கைக்கான சீனத் தூதர் திரு. Qi Zhenhong அவர்களுடன் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர், “இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இருந்து வருவது ஒத்துழைப்புடன் கூடிய நீண்டகால நட்பாகும். எனது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த சீருடையும் அந்த நீண்டகால நட்பின் ஓர் அங்கமே ஆகும்.
2023 – 2024 ஆண்டுகளிலும் சீன அரசு எமது பாடசாலை சீருடைத் தேவையில் கணிசமான பகுதியைக் கொடுத்ததோடு, 2025 ஆம் ஆண்டின் முழு சீருடைத் தேவையையும் எமது நாட்டின் ஒட்டுமொத்தப் பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இலங்கைக்கு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது, எமது மாணவர் சமுதாயத்தின் கல்வியை முன்னெடுப்பதற்காக சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற அந்த நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong,
“இலங்கைக்கு உதவி தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் சீனா உங்களது நம்பிக்கைக்குரிய சகோதரனாகவும் உதவியாளனாகவும் செயல்படும். இலங்கையின் குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, சீன இலங்கை நட்பின் வாரிசுகளும் ஆவர்.
அவர்களின் சீருடையிலுள்ள ஒவ்வொரு தையலிலும், பழமையான நமது இரு நாட்டு நாகரிகங்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் கதையும் பின்னிப் பிணைந்திருக்கும். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கொடுக்கும் பங்களிப்பையும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்தார்.