களுத்துறை – பண்டாரகம , அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாணந்துரை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே, மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் உபாலி தலகல ஆகியோரின் ஆலோசனையின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அட்டலுகம – பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய குறித்த சிறுமி அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு பொருட்கள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்காகச் நேற்று காலை சென்றுள்ளார்.
எனினும் கடைக்குச் சென்று ஒரு மணித்தியாலத்தின் பின்னரும் அவர் வீடு திரும்பாததையடுத்தே வீட்டார் அவரை தேடியுள்ளனர்.
நீண்ட நேரம் அவரை தேடியும் கிடைக்காததையடுத்து பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.
சிறுமி கடைக்குச் சென்று திரும்பிய போது பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காணொளி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் . அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.