“யூரியா உர விற்பனையில் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது”

550

யூரியா உரத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் கடந்த டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்ததன் மூலம் விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த ஆண்டு பருவ காலத்திலும் இந்த வருட மகா பருவத்திலும் 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

இந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்பட்டதுடன், கடந்த டிசம்பர் மாதம் அந்த பணத்தில் ஒரு பகுதியை அரச ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்க அரசாங்கம் பயன்படுத்த வேண்டியிருந்தது என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று (10) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த உண்மைகளை வெளிப்படுத்தினார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விவசாயத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இங்கு நடைபெற்றது.

கடந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களின் செயற்பாடுகளுக்காக அரசாங்கம் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கிய போதிலும், பொருளாதார நெருக்கடி காரணமாக முழுப் பணத்தையும் வழங்க முடியவில்லை. 2023 ஆம் ஆண்டுக்கான விவசாய அமைச்சுக்கு 115 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சுகளுக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தில் 05 வீதத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்த வார இறுதிக்குள் இந்த பருவத்தின் நெல் அறுவடை சில பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதால், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு குறைந்தது 10 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதற்கான பணத்தைக் கோரி அமைச்சரவையில் அமைச்சுப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சுப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here