ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தேவாலயங்கள், கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள், தெஹிவளை கெஸ்ட் ஹவுஸ் மற்றும் தெமட்டகொடை வீட்டுத்தொகுதி ஆகிய 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 272 பேர் பலியாகியிருந்ததுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் இதில் இன்னமும் வைத்தியசாலைகளிலும், வீடுகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குண்டுத் தாக்குல் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு விசேட ஆராதனைகள் வெள்ளிக்கிழமை (21) காலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குலில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக விசேட நடை பவனியும் , மக்கள் மதில் வேலைத்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நடை பவனியானது, கட்டுவப்பிட்டி ஆலயத்திலிருந்து கொச்சிக்கடை திருத்தலம் வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சூத்திரதாரிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படவும், நாட்டில் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் இன,மத, மொழி, கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் ‘மக்கள் மதில்’ வேலைத்திட்டத்தில் பங்கேற்குமாறு நாட்டின் அனைத்து மக்களிடமும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்திருந்தார்.