நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன், அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (09) ஆரம்பமான (Culinary Art Food Expo 2023) சமையல் கலை மற்றும் உணவுக் கண்காட்சி 2023″ இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கம் வருடாந்த சமையல் கலை மற்றும் உணவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்து வருகிறது, இது இலங்கை முழுவதிலும் உள்ள சமையல் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறது.
இவ்வருட கண்காட்சியானது 88 தயாரிப்பு மற்றும் சேவை நிலையங்களை உள்ளடக்கியிருந்ததுடன், அவைகளை பார்வையிட ஜனாதிபதியும் இணைந்துகொண்டார். கண்காட்சியில் பங்குபற்றிய சமையல் கலைஞர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
இத்துறையின் முன்னேற்றத்திற்காக சமையல் கலை தொடர்பான பாடசாலையொன்றை ஸ்தாபித்தல், சமையல் கலைஞர்களை தரவரிசைப்படுத்துவதற்கான முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
2023 சமையல் கலை கண்காட்சிக்கு என்னை அழைத்ததற்காக முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
முதற்கட்டமாக இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி வருமானத்தை அதிகரிப்பதே எமது திட்டம் ஆகும். அதன்படி, நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலா வர்த்தகத்தை முன்னெடுப்பதில் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும்.
சுற்றுலாத் துறையில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அவர்களுக்கு நல்ல சேவையை நாம் வழங்க வேண்டும். அதற்கு பல்வேறு விடயங்கள் இருந்தாலும், மிகவும் கவர்ச்சிகரமானது, இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் எங்களுடைய தனித்துவமான சமையல் கலையாகும். எனவே, சுற்றுலாத் துறை விரிவுபடுத்தப்படும்போது, நாட்டில் போதுமான சமையல் கலைஞர்கள் இருக்க வேண்டும்.
இன்று நாட்டின் மனித வளம் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறுவதைக் காணமுடிகிறது. தற்போது, நம் நாட்டில் போதிய சமையல் கலைஞர்கள் இல்லை. இதன் விளைவாக, தேவைக்கு ஏற்ற விநியோகத்தை வழங்குவதற்கான திறன் இல்லை. எனவே, இந்த நாட்டில் ஹோட்டல் துறையில் சமையல் கலைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசாங்க ஆதரவை வழங்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.
ஆனால் சந்தைத் தேவையை அரசாங்கத்தால் மாத்திரம் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, தனியார் துறையின் பங்களிப்பு இதற்கு இன்றியமையாதது. இதன்போது, அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க அரசு தயாராக உள்ளது.
சமையல் கலை மற்றும் சமையல் கற்கைகளுக்கு என புதிய பாடசாலையொன்றை ஆரம்பிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். இதற்கு தனியார் துறையினரும் பங்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாகாணத்தில் சமையல் கலை மற்றும் சமையற் கற்கை பாடசாலைக்கான கோரிக்கை எழுந்துள்ளது. நுவரெலியா, பண்டாரவளை, எல்ல, தம்புள்ளை ஆகிய நகரங்களில் இவ்வாறான பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என நான் நம்புகிறேன். இளம் சமையல் கலைஞர்களுக்கு தேவையான அறிவை வழங்கவும், நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டு சமையல் கலைஞர்களின் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளவும் இது ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
மேலும், இந்த நாட்டில் சமையல் கலைஞர்களுக்கு தரவரிசை முறையை நிறுவுவது காலத்தின் தேவை என்று நான் கருதுகிறேன். அவர்களுக்கு சர்வதேச தரத்திலான “நட்சத்திரம்” அடையாளங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய சுற்றுலாக் கொள்கையை தயாரிக்கும்போது, சுற்றுலா அமைச்சுடன் இது குறித்து கலந்துரையாட நான் எதிர்பார்த்துள்ளேன். மேலும் தனியார் தொழில் முனைவோர்களும் இதற்கு ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். துறைக்கு தேவையான மனித வளத்தை மேம்படுத்தாமல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாது என்பது எனது நம்பிக்கை ஆகும்.
நமது இளைஞர்களிடம் பல்வேறு திறமைகள் உள்ளன. அந்த திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம், அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். இன்று இங்கு இருக்கும் நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் திறமையான சமையல் கலைஞர்களாக மாறி நாட்டுக்கு சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அதற்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் நாட்டில் தங்குவதற்கு பொருத்தமான பின்புலத்தை உருவாக்கிக்கொடுக்க அரசாங்கம் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளோம்.